என். எஸ். கிருஷ்ணன்

 

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (N. S. Krishnan) என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (Nagercoil Sudalaimuthu Pillai Krishnan, நவம்பர் 29, 1908 – ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

 

வாழ்க்கைச் சுருக்கம்

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

 

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

 

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பண உதவி வழங்கியவர்.

 

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

 

கொலைக் குற்றச்சாட்டு

அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

 

குடும்பம்

கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு மகள் ஒன்று பிறந்தது.[1] கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று இறந்தது.[2] மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.

 

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்

அலிபாபாவும் 40 திருடர்களும் (1941)

பைத்தியக்காரன் (1947)

நல்ல தம்பி (1949)

அமரகவி (1952)

பணம் (1952)

டாக்டர் சாவித்திரி (1955)

நம் குழந்தை (1955)

முதல் தேதி (1955)

காவேரி (1955)

மதுரை வீரன் (1956)

நன்னம்பிக்கை (1956)

கண்ணின் மணிகள் (1956)

ஆசை (1956)

சக்கரவர்த்தி திருமகள் (1957)

புது வாழ்வு (1957)

அம்பிகாபதி (1957)

தங்கப்பதுமை (1959)

தோழன் (1960)

67-ல் என். எஸ். கிருஷ்ணன் (1967) (என்.எஸ்.கே.நடித்த படங்களின் தொகுப்பு)

இவர் இயக்கிய படங்கள்

பணம் (1952)

மணமகள்

இவர் பாடிய பாடல்கள்

ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)

பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)

ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)

ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)

இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)

சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)

ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)

காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)

ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)

ஆரவல்லியே (ஆர்ய மாலா)

கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)

கண்ணனெந்தன் (கண்ணகி)

இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)

Scroll to Top